திருப்பீடப் பேச்சாளர் : ஆயுதப் பயன்பாட்டுக்கு எதிராகக் குரல்
சன.19,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆயுதங்கள் பரவியிருப்பதையும் அவற்றைப் பயன்படுத்துவதையும்
கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகள் சரியான திசையில் எடுக்கப்படும்
ஒரு நல்ல நடவடிக்கை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி
கூறினார். தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களிடம் ஏறக்குறைய முப்பது கோடி துப்பாக்கிகள்
இருக்கின்றன என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, இவற்றின் எண்ணிக்கையையும், இவற்றைப் பயன்படுத்துவதையும்
குறைப்பதால் மட்டும், நியுடவுனில் இடம்பெற்றதைப் போன்று, எதிர்காலத்தில் படுகொலைகளைத்
தடை செய்ய முடியாது என்றும் கூறினார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் துப்பாக்கிகள் கட்டுப்பாடு
குறித்து அந்நாட்டின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த 47 தலைவர்கள் அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு
விடுத்துள்ள கோரிக்கைகளுக்குத் தான் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்த அருள்தந்தை லொம்பார்தி,
உலக அளவில் ஆயுதக் கட்டுப்பாட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.