2013-01-16 15:43:35

நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களைச் சிறப்பிக்கும் விதமாக, Beijing நகரில் இன்னிசை நிகழ்ச்சி


சன.16,2013. நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களைச் சிறப்பிக்கும் விதமாக, சீனாவின் Beijing நகரில் அமைந்துள்ள புதுமைப் பதக்கம் (Miraculous Medal) பங்குத் தளத்தில் இன்னிசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.
சனவரி 13, கடந்த ஞாயிறன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்துவின் திருமுழுக்கு விழாவையொட்டி, 'நம்பிக்கையின் ஒளி' என்ற தலைப்புடன் நடத்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி, இளையோர் மத்தியில் குருத்துவ வாழ்வை வளர்க்கும் ஒரு முயற்சியாக அமைந்தது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சீனாவின் பல்வேறு குருத்துவ பயிற்சி இல்லங்களில் பயிலும் இளையோர் இவ்வின்னிசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர் என்றும், அவர்களின் குருத்துவ அழைத்தலைப் புதுப்பிக்கும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது என்றும் நிகழ்ச்சியின் அமைப்பாளர் அருள்தந்தை Zhang Hong Bo கூறினார்.
இதேபோல், நம்பிக்கை ஆண்டின் 200வது நாள் நிறைவு, அருள்சகோதரிகளை மையப்படுத்தும் துறவற விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், 300வது நாள் நிறைவு குடும்ப வாழ்வை மையப்படுத்தும் விழாவாக அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.