கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் 5 கோடியே, 50 இலட்சத்திற்கும் அதிகமான
குழந்தைகள் கருவில் அழிக்கப்பட்டுள்ளன
சன.16,2013. இம்மாதம் 19ம் தேதி முதல் 27ம் தேதி முடிய அமெரிக்காவில் வாழும் கத்தோலிக்கர்கள்
செபத்திலும், உண்ணா நோன்பிலும் ஈடுபடுமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 40
ஆண்டுகளுக்கு முன், சனவரி 22ம் தேதி அமெரிக்காவில் கருக்கலைத்தல் சட்டமயமானது. இதையடுத்து,
கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் 5 கோடியே, 50 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள்
கருவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்த வன்கொடுமைக்கு எதிராகவும், உயிர்கள் போற்றி வளர்க்கப்பட
வேண்டும் என்ற கலாச்சாரத்தை உருவாக்கவும் ஒன்பது நாள் செபத்திற்கும், உண்ணா நோன்பு மற்றும்
திருப்பயணங்களுக்கும் அமெரிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நாட்களில் நடைபெறும்
பல்வேறு முயற்சிகளின் ஒரு சிகரமாக, சனவரி 25ம் தேதி வாஷிங்டன் நகரில் நடைபெறும் ஓர் ஊர்வலத்தில்
இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்ப்பதாக CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.