இன்றைய மாற்றங்களுக்குத் தகுந்ததுபோல் திருப்பீடமும் எழுத்துப் பணியில் மாற்றங்களை
மேற்கொண்டு வருகிறது- கர்தினால் தர்சிசியோ பெர்தோனே
சன.16,2013. புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை முனைப்புடன் ஆற்றிவரும் திருப்பீடம்,
பாரம்பரிய கலாச்சாரங்களைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ளது என்று திருப்பீடச் செயலர் கர்தினால்
தர்சிசியோ பெர்தோனே கூறினார். வத்திக்கான் பதிப்பகத்தின் புதிய கட்டிடத்தை இச்செவ்வாயன்று
திறந்து வைத்து, துவக்க உரையாற்றிய கர்தினால் பெர்தோனே, அச்சுத் துறையில் ஏற்பட்டுள்ள
பெரும் மாற்றங்களுக்குத் தகுந்ததுபோல் திருப்பீடமும் தன் எழுத்துப் பணியில் மாற்றங்களை
மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளாக வத்திக்கான் பதிப்பகம்
வெளியிடும் நூல்களில் விவிலியம், திருவழிபாடு, ஆன்மீகம் என்ற துறைகளையும் தாண்டி, பல்வேறு
நன்னெறி அம்சங்களும் இடம்பெற்று வருகின்றன. புத்தகங்களில் மட்டுமே இடம்பெற்றுவந்த
அச்சுப் பணி தற்போது கணணி நூல்கள், இணையதள பதிப்புக்கள் என்று முன்னேறிவருவதற்கு ஏற்ப,
வத்திக்கான் பதிப்பகமும் மாறி வருகிறது என்பதை கர்தினால் பெர்தோனே மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.