ஜோர்டன் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு எருசலேம் முதுபெரும் தலைவர் செய்தி
சன.15,2013. ஜோர்டன் குடிமக்கள், தங்களது அன்புமிக்கத் தாயகத்துக்குத் தாங்கள் கொண்டிருக்கும்
உரிமைகளையும் கடமைகளயும் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத் தேர்தல்கள் மதிப்புமிக்க வாய்ப்பு
என்று எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal கூறினார். ஜோர்டனில் இம்மாதம்
23ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதையொட்டி ஜோர்டன் மக்களுக்குச் செய்தி
அனுப்பியுள்ள முதுபெரும் தலைவர் Twal, ஜோர்டன் குடிமக்கள், நாட்டின் அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள
தேர்தல் குறித்த உரிமைகளைச் செயல்படுத்த முடிந்தமைக்கு அந்நாட்டு அரசர் 2ம் அப்துல்லாவுக்கு
நன்றி தெரிவித்துள்ளார். ஜோர்டனின் அனைத்து முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சட்டத்தின்
முன்பாக சமம் என்று, 2009ம் ஆண்டு மே மாதத்தில் அரசர் 2ம் அப்துல்லா, திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்களிடம் கூறியதையும் நினைவுபடுத்தியுள்ளார் முதுபெரும் தலைவர் Twal. ஒரே
கடவுள் கொள்கையுடைய ஜோர்டனில், கடவுளுக்கு அடுத்தபடியாக, தங்களது நாட்டு மக்களின் நியாயமான
உரிமைகளுக்கு உறுதியளித்து அவற்றைப் பாதுகாப்பதே அரசின் கடமை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.