சன.14,2013. ஜோர்டனில் Zaatari என்ற பகுதியில் அமைந்திருந்த அகதிகள் முகாம்கள் பனிப்புயலாலும்
பெருமழையாலும் சேதமடைந்துள்ளதைத் தொடர்ந்து, சிரியாவின் அகதிகள் தங்குவதற்கெனத் தலத்திருஅவை
தன் பள்ளிகளையும் ஏனையக் கட்டிடங்களையும் திறந்துவிட்டுள்ளதாக அறிவித்தார் ஜோர்டனுக்கான
எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவரின் பிரதிநிதி பேராயர் Maroun Laham. கிறிஸ்தவர்கள்
இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் அடைக்கலம் தர தலத்திருஅவையின் கட்டிடங்கள் எப்போதும் தயாராக
இருப்பதாகத் தெரிவித்தார் அவர். ஜோர்டனில் உள்ள Zaatari அகதிகள் முகாம் சூறாவளிகளால்
முற்றிலுமாக சேதமானததைத் தொடர்ந்து, பொருளாதார உதவிகளையும் வழங்கி வரும் தலத்திருஅவை,
கலவரங்களைத் தடுக்கும் நோக்கில் அமைதிப்பணிகளையும் ஆற்றி வருகிறது. சிரியாவில் நடைபெற்றுவரும்
உள்நாட்டுச் சண்டைகளால் மத்தியக்கிழக்கு நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள ஆறு இலட்சம் அகதிகளுள்
இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் பேர் ஜோர்டனில் வாழ்ந்து வருகின்றனர்.