வத்திக்கான் காவல்துறையினரிடம் திருத்தந்தை : ஒவ்வொரு திருப்பயணியிலும் இறைவனின் முகத்தைக்
காண வேண்டும்
சன.12,2013. வத்திக்கானைப் பார்வையிட வரும் ஒவ்வொரு திருப்பயணியும் மாபெரும் மனிதக் குடும்பத்தின்
ஓர் அங்கம் என்பதை அறிந்து, அப்பயணிகளில் கடவுளின் திருமுகத்தைக் கண்டு, அவர்களைக் கனிவோடு
ஏற்று உதவி செய்யுமாறு வத்திக்கான் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். வத்திக்கானில் பணியாற்றும் காவல்துறையினரை இவ்வெள்ளி மாலை சந்தித்து உரையாற்றிய
திருத்தந்தை, தியாகத்துடன் அவர்கள் செய்து வரும் திறமையான நற்பணிகளுக்குத் தனது நன்றியைத்
தெரிவிப்பதாகவும் கூறினார். தினமும் தூய பேதுருவின் கல்லறையைத் தரிசிக்க வரும் எண்ணற்ற
திருப்பயணிகளைக் காணும்போது, வத்திக்கான் காவல்துறையினரின் ஆன்மீக வாழ்வும், கிறிஸ்தவ
விசுவாசமும் ஆழப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார். அமைதி, சகோதரத்துவம்,
அன்பு ஆகியவற்றுக்கான மனிதரின் ஆழமான தேடல், மீட்பளிக்கும் மற்றும் விடுதலையளிக்கும்
கடவுளைச் சந்திப்பதில் கிடைக்கும் என்பதை நம்பி அதை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் எவ்வளவு
மகிழ்ச்சி இருக்கின்றது என்பதை உணருவதற்கு இந்த விசுவாச ஆண்டு மிகப்பெரிய அளவில் உதவும்
என்றும் திருத்தந்தை கூறினார்