சன.12,2013. Monaco நாட்டின் இளவரசர் 2ம் Alberto, அவரது மனைவி இளவரசி Charlène ஆகிய
இருவரையும் இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இச்சந்திப்புக்குப்
பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான
உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் இளவரசர் 2ம் Alberto. இச்சந்திப்பில்,
Monaco நாட்டின் சமூகநலத்துக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் குறித்துப்
பாராட்டினார் இளவரசர் 2ம் Alberto. மேலும், தற்போதைய சில அனைத்துலக விவகாரங்கள் குறித்த
கருத்துப் பரிமாற்றங்களும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாகத் திருப்பீட பத்தரிகை அலுவலகம்
கூறியது. மேற்கு ஐரோப்பாவில், மூன்று பக்கங்கள் பிரான்ஸ் நாட்டையும், ஒரு பக்கம் மத்தியதரைக்
கடலையும் எல்லைகளாகக் கொண்டிருக்கும் Monaco நாடு, உலகில் இரண்டாவது சிறிய நாடாகும்.
இது இத்தாலிக்கு ஏறக்குறைய 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும், இயேசுவின்
திருமுழுக்கு விழாவான இஞ்ஞாயிறன்று வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் இருபது குழந்தைகளுக்குத்
திருமுழுக்குத் திருவருட்சாதனத்தை வழங்குவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.