2013-01-11 15:28:25

மியான்மாரில் ஜூபிலி ஆண்டில் சுதந்திரமும் ஒப்புரவும் ஏற்படும், யாங்கூன் பேராயர் நம்பிக்கை


சன.11,2013. மியான்மாரில் ஐம்பது வருட காலமாய் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருந்த இருளான காலத்துக்குப் பின்னர், தற்போது பிரகாசமான ஒளி வீசத் தொடங்கியிருக்கின்றது என்று அந்நாட்டு ஆயர் பேரவையின் பொதுச் செயலர் யாங்கூன் பேராயர் Charles Maung Bo கூறினார்.
Fides செய்தி நிறுவனத்துக்கு 2013ம் புத்தாண்டுச் செய்தி அனுப்பியுள்ள பேராயர் Bo, மியான்மாரில் 1962ம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சி தொடங்கியபோது மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நினைவுகூர்ந்துள்ளார்.
அச்சமயத்தில் மியான்மாரை இருள் வளைத்திருந்தது, நாட்டின் வரலாறு உறைந்து போனது, சிறார் அமைதியின் அடிமைத்தனத்தில் முடக்கப்பட்டனர், பலர் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர், இலட்சக்கணக்கானோர் புலம் பெயர்ந்து அகதிகளாகினர், அப்பாவிச் சிறுமிகள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர், பலருக்குக் கண்ணீரிலே இரவு கழிந்தது என, மக்கள் அனுபவித்த நெருக்கடிகளை விவரித்துள்ளார் பேராயர் Bo.
தற்போது மியான்மார் மக்கள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குவதாகவும், உண்மையின் ஒளி அம்மக்கள்மீது வீசத் தொடங்கியிருப்பதாகவும், சுதந்திர ஒளியில் அவர்கள் மெதுவாக விழிப்படைந்து வருவதாகவும் யாங்கூன் பேராயரின் செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.