உலகளவில் உணவுப் பொருட்கள் பெருமளவு வீணாக்கப்படுகின்றது
சன.11,2013. உலக அளவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில், பாதியளவுக்கு வீணாக்கப்படுகின்றது
என்று பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஒரு பொறியியல் அமைப்பு கூறியுள்ளது. ஏழை
நாடுகளில் உணவுப் பொருட்களின் உற்பத்திகள் திறம்பட இல்லாததும், செல்வந்த நாடுகளில் இருக்கும்
நுகர்வோர்கள், பொருட்கள் மிக நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுமே இதற்கு
முக்கிய காரணங்கள் என்று பிரிட்டனிலுள்ள இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மெக்கானிக்கல் இஞ்ஜினியர்ஸ்
எனும் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகளவில் படிப்படியாக விவசாய
நிலங்களும் நீர்வளங்களும் குறைந்து வரும் நிலையில் உணவு தானிய விரயம் என்பது பெரும் தாக்கத்தை
ஏற்படுத்துகிறது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. செல்வந்த நாடுகளில்
கடைகளில் காய்கனிகள் வாங்கும் போது அவை பார்ப்பதற்குச் சீராகவும் நேர்த்தியாகவும் இருக்க
வேண்டும் என்கிற மனநிலையும், அதிகமாகப் புலால் உண்ணும் பழக்கமும்கூட இதில் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.