ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு கர்தினால் கிரேசியஸ்
முயற்சி
சன.11,2013. சமுதாயத்தில் நீதி, விழிப்புணர்வு, பாலியல் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்
நோக்கத்தில், இம்மாதம் 27ம் தேதியன்று மும்பை உயர்மறைமாவட்டம் ஒருமைப்பாட்டு தினத்தைக்
கடைப்பிடிக்கும் என மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் கூறினார். 23 வயது
மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் புதுடெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்த
பின்னர் நாடெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விவாதங்கள் இடம்பெற்றுவரும்வேளை,
இந்த ஒருமைப்பாட்டுத் தினத்தை அறிவித்துள்ளார் கர்தினால் கிரேசியஸ். கடவுளை மனித வாழ்விலிருந்து
ஒதுக்கி வைப்பதே, கொடூரமான வன்செயல்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு
மனிதரை இட்டுச் செல்கின்றது என்றும் கர்தினால் கிரேசியஸ் குறை கூறினார். இந்தியத்
திருஅவை பல்வேறு வழிகள் மூலமாக, குறிப்பாக, தனது கல்வி நிறுவனங்கள் வழியாகப் பாலியல்
சமத்துவத்தை வலியுறுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், இம்மாதம்
27ம் தேதி ஞாயிறன்று மும்பை உயர்மறைமாவட்டம் முழுவதும் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும்
பல்வேறு நடவடிக்கைகள் என, 24 மணி நேரங்களுக்கு இடம்பெறும். மாலை 6 மணி முதல் 7 மணி வரை
ஒவ்வொரு பங்கிலும், துறவியர் இல்லங்களிலும், குருத்துவக் கல்லூரிகளிலும் செபவழிபாடும்
நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 20,370 கல்வி நிறுவனங்களில்
58.5 விழுக்காடு கிராமங்களில் இருப்பதாகவும், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 54.4
விழுக்காடு சிறுமிகள் எனவும் அண்மைப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.