திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் உலக அமைதி நாள் செய்திக்கு இந்தியாவில் உள்ள
மனித உரிமைகள் ஆர்வலர் Raguvanshiன் பாராட்டு
சன.10,2013. உலக அமைதிக்கும், ஏழை செல்வந்தரிடையே உள்ள இடைவெளிக்கும் நெருங்கியத் தொடர்பு
உண்டு என்று தனது 46வது உலக அமைதி நாள் செய்தியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள்
கூறியிருப்பதை இந்தியாவில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் பாராட்டியுள்ளார். சுயநலமும்,
ஒவ்வொருவரும் தனி என்ற உணர்வும் உலகில் இன்று பரவி வரும் போக்கை, திருத்தந்தை தன் உலக
அமைதி நாள் செய்தியில் கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டிய Lenin Raguvanshi என்ற சமூக
ஆர்வலர், இந்தியாவில் ஆண்களின் சுயநலம் கட்டுப்பாடின்றி வளர்ந்து வருவதைக் காண முடிகிறது
என்று கூறினார். மனித உரிமைகள் பற்றிய மக்களின் கண்காணிப்பு (People's Vigilance Committee
on Human Rights) என்ற அமைப்பின் இயக்குனராகப் பணியாற்றி வரும் Raguvanshi, ஓர் ஏழைக்
குடும்பத்தில் பிறந்த இயேசு, ஏழைகளின் தேவைகளை மட்டும் இவ்வுலகிற்கு உணர்த்தவில்லை, அவர்களுக்கு
உரிய மதிப்பையும் நாம் வழங்க வேண்டும் என்பதை உணர்த்தினார் என்று எடுத்துரைத்தார். அமைதி
என்பது இறைவன் வழங்கும் ஒரு பரிசு என்று திருந்தந்தை தன் செய்தியில் கூறியிருப்பதைச்
சுட்டிக் காட்டிய Raguvanshi, அனைத்து விதமான அடிப்படைவாதக் கொள்கைகளும் இறைவன் தரும்
இப்பரிசை அலட்சியப்படுத்துகின்றன என்று கூறினார்.