சன.09, 2013. ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் தாக்கி வரும் கடுங்குளிருக்கு இத்தாலியும்
விதிவிலக்கில்லாமல் அதை அனுபவித்துவர, உரோம் நகர் மட்டுமே தற்போது நல்ல சூரிய ஒளியுடனும்
மிதமான குளிருடனும் உல்லாசப் பயணிகளைக் கவருவதாக இருந்து வருகிறது. இத்தகையை ஒரு பின்னணியில்,
இவ்வாரம் தன் புதன் பொதுமறைபோதகத்தை திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் கூடியிருந்த
ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு 'இயேசுவின் மனுவுரு' குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். வானகத்தந்தையின் தத்துப்பிள்ளைகளாக நாம் மாறும் வண்ணம், நம் மீட்புக்காக
மனிதனாகப் பிறந்த இறைமகனின் மனுவுரு எனும் மறையுண்மையை கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் காலத்தில்
நாம் கொண்டாடுகிறோம். பெத்லகேம் குழந்தையில் இறைவன் நமக்கு மிகப்பெரும் கொடை ஒன்றை வழங்கினார்.
ஆம். தன்னையே கொடையாகத் தந்தார். நமக்காக இறைவன் நம்மைப்போல் ஒருவரானார். நம் மனித வாழ்வை
முழுமையாகப் பகிர்ந்துகொண்டு அதற்குக் கைமாறாக, தன் தெய்வீக வாழ்வில் நமக்குப் பங்களித்தார்.
கடவுள் நம் மீது கொண்டிருக்கும் அன்பின் ஆழத்தையும் உண்மைதன்மையையும் வெளிப்படுத்தி
நிற்கிறது இந்த உன்னத மறையுண்மை. இறைவார்த்தையின் உண்மைகளை ஏற்று நம் தினசரி வாழ்வை மேம்படுத்தும்
விசுவாசத்தில் நாம் இறைவனுக்குப் பதிலுரைக்க இம்மறையுண்மை அழைப்பு விடுக்கிறது. இறைவன்
மனுவுருவெடுத்த மறையுண்மை குறித்து நாம் ஆழமாக சிந்திக்கும் வேளை, கிறிஸ்துவில் நாம்
புதிய ஆதாமைப் பார்க்கிறோம். ஒரு முழுநிறைவான மனிதனாக புதுப்படைப்பைத் துவக்கி வைக்கிறார்
இறைமகன். இறைச்சாயலை நமக்கு மீண்டும் பெற்றுத்தருவதோடு, நம் அழைப்பையும் மேன்மைமிகு மனித
மாண்பையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். மனுவுரு எனும் மறையுண்மை குறித்து இந்தக் கிறிஸ்துமஸ்
காலத்தின் இறுதி நாட்களில் ஆழமாக சிந்தித்து வரும் நாம், இறைவனின் மகிமை எனும் ஒளியில்
முழுமையான மகிழ்வைக் கண்டு, மனிதனாக உருவெடுத்த இறைமகனின் திருவுருவுக்கு ஒத்த வகையில்
மேலும் சிறப்பான விதத்தில் மாறுவோமாக. இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய
திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.