இனக் கலவரங்களின்போது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதையும் இந்திய அரசுகருத்தில் கொள்ளவேண்டும் - CSW
சன.09,2013. பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி சிந்தித்துவரும் இந்திய அரசு, இனக் கலவரங்களின்போது
பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று CSW (Christian
Solidarity Worldwide) என்ற உலகளாவிய கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு அமைப்பு கூறியுள்ளது. 23
வயது இளம்பெண் ஒருவர், புதுடில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்ததையடுத்து,
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 1990களில்
மும்பையில் நடைபெற்ற கலவரங்களின்போதும், 2002ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரங்களின்போதும்
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பலியானதை இவ்வமைப்பு
தனிப்பட்ட விதத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், 2008ம் ஆண்டு கந்தமால் கலவரங்களின்போது
பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அருள்சகோதரி ஒருவர் நான்காண்டுகளுக்குப் பிறகு
இன்னும் நீதி கிடைக்காமல் இருப்பதையும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.