அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்களின் தாய்மாருக்குக் கர்தினால் பியாச்சென்சா
கடிதம்
சன.08,2013. உலகின் அனைத்து அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்கள் தங்களது இறையழைப்பைப்
பெறுவதற்குக் காரணமாக இருந்த அவர்களின் தாய்மாருக்கு நன்றி தெரிவித்துள்ளார் கர்தினால்
Mauro Piacenza. இறைவனின் அன்னைப் பெருவிழாவை முன்னிட்டு உலகின் அனைத்து அருள்பணியாளர்கள்
மற்றும் குருத்துவ மாணவர்களின் தாய்மாருக்குத் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ள, திருப்பீட
குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் Piacenza, இளைஞர்கள் இறையழைத்தலைப் பெறுவதற்கு உதவுவதில்
குடும்பங்களின் பங்கைச் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தக் கடிதம் குறித்து வத்திக்கான்
வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Piacenza, குருத்துவ வாழ்வைத் தேர்ந்து கொள்பவரின்
வாழ்வில் கிறிஸ்து செயல்பட்டாலும், தாய்மார் அதில் சிறப்புப் பங்கு வகிக்கின்றனர் எனவும்
கூறினார். புனித அகுஸ்தீனாரின் தாய் புனித மோனிக்காவின் வாழ்வு பற்றி விளக்கிய கர்தினால்
Piacenza, புனித மோனிக்கா அனைத்துத் தாய்மாருக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கின்றார்
எனவும் கூறினார். தனது கன்னி உதரத்தில் இறைவார்த்தையை வரவேற்று உன்னத குருவாம் இயேசுக்
கிறிஸ்துவைப் பெற்றெடுத்து தனிப்பட்ட விதத்தில் நமது மீட்புப் பேருண்மையில் பங்கு கொண்ட
அன்னை மரியாவை நினைப்பது போன்று, அனைத்து அருள்பணியாளர்களின் தாய்மாரையும் திருஅவை நினைக்கின்றது
என்றும் கர்தினால் கூறினார்.