சன.07,2013. 2012ம் ஆண்டில் கியூபாவில் மத உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக குறைகூறும்
உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு, கியூப அரசுத்தலைவர் இதில் உடனடி நடவடிக்கை
மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது. நாட்டில் மத உரிமைகள் மீறப்படுவதால்
அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது கத்தோலிக்கர்களே எனக்கூறும் இவ்வமைப்பு, அதற்கடுத்தபடியாக
பேப்டிஸ்ட், பெந்தகோஸ்தே மற்றும் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கின்றது. 2012ம் ஆண்டின் இறுதி நாட்களில் அதிக அளவில் உரிமை மீறல் நடவடிக்கைகள்
இடம்பெற்றதாகக் கூறும் இவ்வமைப்பு, மத உரிமை மீறல்கள் தொடர்புடைய வன்முறைகள் அதற்கு முந்தைய
ஆண்டைவிட 2012ம் ஆண்டில் நான்கு மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கிறது. மதக் குழுக்களுக்கு
பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அரசு வாக்குறுதிகளை வழங்கியுள்ளபோதிலும், மதக் குழுக்கள்
தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் அதிகரித்தே வருவதாக கியூப மதத்தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.