மலேசியாவில் நாடற்ற நிலையில் மூன்று இலட்சம் இந்தியர்கள்
சன.04,2013. மலேசியாவில் இவ்வாண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ள
நிலையில், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் பள்ளிகளில் சேர
முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களில் ஏறக்குறைய மூன்று
இலட்சம் பேர், மலேசியாவில் நாடற்ற நிலையில் வாழ்வதாகவும், அவர்களை அரசு திட்டமிட்ட வகையில்
புறக்கணிக்கிறது எனவும் தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
என்.சுரேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இம்மக்கள் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தாலும்,
அவர்களுக்குத் தொடர்ந்து பிறப்புச் சான்றிதழும் அடையாளஅட்டையும் மறுக்கப்படுகின்றன என்றும்,
இது சட்டத்துக்கு விரோதமானது என்றும் அவர் தெரிவித்தார். எனினும், இந்தோனேசியா, பங்களாதேஷ்
போன்ற நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு உடனடியாகத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு,
அதன் மூலம் அவர்கள் அரசின் சலுகைகளைப் பெறுகிறார்கள் எனவும், அவர்களின் வாக்குகளை குறி
வைத்தே அரசு இப்படிச் செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, என்.சுரேந்திரன்
அவர்களின் குற்றச்சாட்டுக்கு மலேசிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.