புனித பூமியில் துன்புறும் மக்களுடன் ஆயர்கள் ஒருமைப்பாடு
சன.04,2013. ஜோர்டனில் வாழும் சிரியா நாட்டு அகதிகள் மற்றும் புனித பூமியில் துன்புறும்
மக்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் ஐரோப்பா மற்றும் வட
அமெரிக்க ஆயர்கள் இவ்வாரத்தில் அப்பகுதிக்குச் செல்லவிருக்கின்றனர். புனித பூமித்
திருஅவைக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க ஆயர் பேரவைகள் மற்றும் புனித பூமி
கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் இச்சனிக்கிழமையன்று பெத்லகேமில் தொடங்கும் கூட்டத்தின்
ஒரு நிகழ்வாக, இப்பிரதிநிதிகள் ஜோர்டன் மற்றும் பிற பகுதிகளைப் பார்வையிடவிருக்கின்றனர். இம்மாதம்
10ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தின் இறுதியில் இப்பிரதிநிதிகள் எருசலேமுக்குத்
திருப்பயணம் மேற்கொண்டு புனித கல்லறை பசிலிக்காவில் திருப்பலியும் நிகழ்த்துவார்கள். எருசலேம்
இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal, திருப்பீடத்தூதர் பேராயர் Giuseppe Lazzarotto,
இன்னும், அகதிகள் முகாம்கள், சிறைகள் மற்றும் குடியேற்றதாரர் மத்தியில் பணிசெய்வோர் எனச்
சிலர், மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமை குறித்து இக்கூட்டத்தில் விளக்குவார்கள் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது