இவ்வுலகை எடுத்துக்கொண்டோமானால் இங்கு 29.22 விழுக்காடே நிலப்பரப்பாக, மண் மூடியதாகஉள்ளது,
அதாவது 5கோடியே 75 இலட்சம் சதுர மைல்கள். மீதியுள்ள 70.78 விழுக்காடு, அதாவது 13 கோடியே
94 இலட்சம் சதுர மைல்கள் நீர் நிறைந்து காணப்படுகிறது. உலகில் காணப்படும் நீரிலும் 96.5
விழுக்காடு கடல் நீராக உள்ளது. மீதியுள்ள நீரிலும் 68 விழுக்காடு பனிக்கட்டிகளாகவும்
பனிப்பாறைகளாகவும் உள்ளது. உப்பற்ற நல்ல நீரிலும் 30 விழுக்காடு நிலத்தடி நீராக உள்ளது.
உலகின் மொத்த நீரில் ஒரு விழுக்காடே அருந்தத் தகுதியுள்ளது. அதிலும் 0.08 விழுக்காடே
மனிதனுக்கு கிட்டும் நிலையில் உள்ளது. உலகில் எட்டுபேரில் ஒருவருக்கு சுத்தக் குடிநீர்
கிடைப்பதில்லை. 5 வயதிற்குட்பட்ட சிறார்களின் மரணங்களுள் ஐந்தில் ஒன்று நீர் தொடர்புடைய
நோய்களால் ஏற்படுகின்றது. உலகின் மொத்த நல்ல நீரில் 70 விழுக்காடு விவசாயத்திற்கும்,
22 விழுக்காடு தொழிற்சாலைகளுக்கும், 8 விழுக்காடு வீட்டு உபயோகங்களுக்கும் என பயன்படுத்தப்படுகிறது.
உலகில் 1991 முதல் 2000 வரை 6,65,000 உயிரிழப்புகளுக்கு காரணமான 2557 இயற்கைப்பேரிடர்களுள்
90 விழுக்காடு தண்ணீரோடு தொடர்புடையது. பஞ்ச பூதங்களுள் ஒன்றான தண்ணீர், திடம், திரவம்
மற்றும் வாயு என்ற மூன்று நிலைகளிலும் காணக்கிடக்கிறது. பொதுவாகவே மனித இனம் தோன்றியதற்கு
அடிப்படை ஆதாரமே நீர்நிலையாகத்தான் இருந்துள்ளது. பல்வேறு நாகரீகங்கள் ஆற்றங்கரையோரங்களில்தான்
உருவாகியுள்ளன.