கிறிஸ்மஸ் விழாக்களில் இந்து சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டது,
புதிய ஆண்டிற்குத் தேவையான நம்பிக்கையை வளர்த்துள்ளது - பேராயர் பார்வா
சன.02,2013. கிறிஸ்மஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி ஒடிஸ்ஸா மாநிலத்தின் பல்வேறு கோவில்களில்
மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது மகிழ்வையும், நம்பிக்கையையும் தருகிறது என்று கட்டக்
புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார். 2007-2008 ஆகிய ஈராண்டுகள் ஒடிஸ்ஸாவில்
நிகழ்ந்த வன்முறைகளுக்குப் பின், அங்குள்ள கிறிஸ்தவ கோவில்களில் திருவிழாக்கள் அச்சத்துடனேயே
கொண்டாடப்பட்டு வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் பார்வா, இவ்வாண்டு
நிகழ்ந்த கொண்டாட்டங்கள் பெரும்பாலும் அச்சமின்றி அமைந்தது நம்பிக்கை தரும் ஓர் அடையாளம்
என்று கூறினார். இவ்வாண்டு நிகழ்ந்த விழாக்களில் இந்து சகோதர, சகோதரிகள் பெருமளவு
கலந்துகொண்டது, புதிய ஆண்டிற்குத் தேவையான நம்பிக்கையை வளர்த்துள்ளது என்றும் பேராயர்
பார்வா ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார். 2013ம் ஆண்டுக்கென பேராயர் பார்வா விடுத்துள்ள
புத்தாண்டுச் செய்தியில், இளையோர் நற்செய்தியைப் பரப்பும் பணியாளர்களாய் விளங்க வேண்டும்
என்ற சிறப்பு அழைப்பை விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு
கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் செல்வதற்கு, காவல் துறையினர் மேற்கொண்ட முயற்சிகளையும்
பேராயர் புகந்து கூறி, கிறிஸ்தவ சமுதாயத்தின் நன்றியையும் எடுத்துரைத்தார்.