கர்தினால் கிரேசியஸ் : இந்தியச் சமூகத்தில் பெண்கள் புறக்கணிக்கப்படுவது பரவலாகக் காணப்படுகின்றது
டிச.28,2012. மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் புதுடெல்லியில் கொடூரக் கும்பல் ஒன்றால்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது, இந்தியாவின் நலமற்ற நிலைக்குப் பயங்கரமான எடுத்துக்காட்டாய்
இருக்கின்றது என்று மும்பை கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறினார். இந்தியச் சமுதாயத்தை
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்தப் பாலியல் வன்கொடுமை, மனிதர் தங்கள் வாழ்விலிருந்து
கடவுளை ஓரங்கட்டியுள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாயும் இருக்கின்றது என்று ஆசியச் செய்தி
நிறுவனத்திடம் கூறினார் கர்தினால் கிரேசியஸ். இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து கிறிஸ்மஸ்
திருப்பலியிலும் வன்மையாய்க் கண்டித்த கர்தினால் கிரேசியஸ், இந்தியச் சமூகத்தில் பெண்கள்
புறக்கணிக்கப்படுவது பரவலாகக் காணப்படுவதை இந்நிகழ்வு காட்டுகின்றது என்று கூறினார். தங்கள்
வாழ்விலிருந்து கடவுளை ஓரங்கட்டுவோர் அமைதியின் எதிரிகள் என்றும், பிறருக்கென வாழ்வது
குறித்து நோக்கும்போது கிறிஸ்தவர்கள்கூட தங்கள் இதயங்களைப் அடைத்துக் கொள்கிறார்கள் என்றும்,
இந்த நம்பிக்கை ஆண்டில் பிறருக்கென நம் இதயங்களைத் திறப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 16ம் தேதி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 23 வயதாகும் மருத்துவக் கல்லூரி
மாணவி ஒருவர் தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.