பெத்லகேமில் ஒலித்த செய்தியை இவ்வுலகம் இன்னும் மறுத்து வருகிறது - முதுபெரும் தலைவர்
Bartholomew
டிச.27,2012. "இறைவனுக்கு மகிமையும், நல்மனத்தோருக்கு அமைதியும்" என்று பெத்லகேமில் ஒலித்த
செய்தியை இவ்வுலகம் இன்னும் மறுத்து வருகிறது என்று Constantinople Ecumenical சபையின்
முதுபெரும் தலைவர் Bartholomew கூறினார். உலகப் பொருட்களின் மீது மனித சமுதாயம் வளர்த்துள்ள
கட்டுக்கடங்காத பேராசையின் ஒரு வெளிப்பாடே நமது வன்முறைகள் என்று முதுபெரும் தலைவர் Bartholomew,
கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவன்று வழங்கிய செய்தியில் குறிப்பிட்டார். மதம், அரசியல்,
பொருளாதாரம் என்ற பல நிலைகளிலும் வலுவானவர்களே ஆதிக்கம் செலுத்துவதும், வலுவற்றோர் பாதிக்கப்படுவதும்
இன்றையச் சூழல் என்பதைச் சுட்டிகாட்டிய முதுபெரும் தலைவர் Bartholomew, இந்நிலை மாறவேண்டும்
என்ற அழைப்பை விடுத்தார். 313ம் ஆண்டிலேயே பேரரசர் Constantine கிறிஸ்துவ வழிபாட்டிற்கு
முழு சுதந்திரம் அளித்த போதிலும், 21ம் நூற்றாண்டிலும் கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள்
இன்னும் தாக்குதல்களுக்கு உள்ளாகிவருவது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது என்று முதுபெரும்
தலைவரின் செய்தி எடுத்துரைக்கிறது.