சிரியா நாட்டில் ரொட்டி வாங்கக் காத்திருந்த மக்கள் மீது குண்டு வீசப்பட்டது
டிச.26,2012. சிரியா நாட்டில் Halfaya என்ற ஊரில் ரொட்டி வாங்கக் காத்திருந்த மக்கள்
மீது குண்டு வீசப்பட்டதில், 90க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 40க்கும் அதிகமானோர்
காயமுற்றுள்ளனர். இஞ்ஞாயிறன்று Halfayaவில் உள்ள ஒரு ரொட்டிக் கடை மீது விமானத்திலிருந்து
குண்டுகள் வீசப்பட்டன என்றும், இத்தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஊடகங்கள்
கூறுகின்றன. அரசுக்கும், போராட்டக் குழுக்களுக்கும் இடையே கடந்த 21 மாதங்களாக நடைபெற்றுவரும்
மோதல்களில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருத்தந்தை
16ம் பெனடிக்ட் கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவன்று வழங்கிய Urbi et Orbi சிறப்புச் செய்தியில்,
சிரியா நாட்டு மக்கள் ஆழமாகக் காயமுறவும், பிரிவினைகளைச் சுமக்கவும் காரணமாகும் மோதல்,
அப்பாவி மக்களைப் பலிவாங்கி நிற்கிறது; இந்த இரத்தம் சிந்தல்கள் நிறுத்தப்பட, மீண்டுமொருமுறை
அழைப்பு விடுக்கிறேன் என்று சிறப்பான விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டார்.