டிச.22,2012. உலகின் சிறந்த கணித மேதைகளில் ஒருவரான சீனிவாச இராமானுஜத்தின் பிறந்த நாளான
டிசம்பர் 22ம் தேதி இந்திய தேசியக் கணித தினமாகச் சிறப்பிக்கப்படுகின்றது. இவரின்
கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளையோர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது
பிறந்த தினம், இந்திய தேசியக் கணித தினமாகக் கடைபிடிக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர்
மன்மோகன் சிங் அறிவித்தார். ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற அறிவியலாளர்களுடன் ஒப்பிடப்பட்ட
பெருமை கணிதமேதை இராமானுஜத்துக்கு உண்டு. இவர், 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதியன்று
ஈரோட்டில் பிறந்தார். இவர் தனது 12வது வயதில், கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை
காண முடியாத ஆறாயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்றார். அப்போது, "மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்'
ராமானுஜனுக்கு சிறு வேலை கிடைத்தது. அவரது கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக நிர்வாகி எஸ்.என்.அய்யர்,
இராமானுஜன் கண்டுபிடித்த முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப
உதவினார். இருப்பினும், 1913ல் இராமானுஜன், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிக்கு மீண்டும்
அதனை அனுப்பினார். அதைக் கண்ட ஹார்டி, இதைப் படைத்தவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு
மேதையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து, இராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு
அழைத்தார். இதை ஏற்று, 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இராமானுஜனின் திறமை, சில நாட்களிலேயே
உலகின் கவனத்தை ஈர்த்தது. ராமானுஜனின் உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு
உண்டு.