பன்னாட்டுக் கிறிஸ்மஸ் குடில் அருங்காட்சியகத்துக்கு முதன்முறையாக இந்தியக் குடில்
டிச.21,2012. இந்தியக் கலாச்சாரத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில் ஒன்று,
இயேசு பிறந்த பெத்லகேமிலுள்ள பன்னாட்டுக் கிறிஸ்மஸ் குடில் அருங்காட்சியகத்துக்கு முதன்முறையாக
அனுப்பப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பெத்லகேமுக்கு அனுப்பப்படுவதற்கென கொல்கத்தாவில்
கலைஞர்கள் குழு ஒன்றினால் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் குடில், தற்போது கொல்கத்தா புனித
சேவியர் கல்லூரியில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 12 உருவங்கள் கொண்ட இந்தக் குடிலில்,
இரண்டு அடி உயர மனிதர்கள் மற்றும் விலங்குகள் என, பல்வேறு அளவுகளில் உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன
என்று, இந்த இந்தியக் குடிலைத் தயாரித்த கலைஞர்களில் ஒருவரான Subrato Ganguly கூறினார்.
பெத்லகேமிலுள்ள பன்னாட்டு கிறிஸ்மஸ் குடில் அருங்காட்சியகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச்
சேர்ந்த குடில்கள் இருக்கும்போது இந்தியக் குடில் இதுவரை இல்லாதது வருத்தமளிக்கின்றது
என்று Ganguly மேலும் கூறினார்.