2012-12-20 15:38:31

பேராயர் Zimowski : மனிதர்களின் வலுவற்ற நிலையில் இறைவனின் வல்லமை வெளிப்படுகிறது


டிச.20,2012. மனிதர்களின் இயலாமையிலும், வலுவற்ற நிலையிலும் இறைவனின் வல்லமை வெளிப்படுகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ASL என்று அழைக்கப்படும் உரோம் நகர் நல நிறுவனம் இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு திருப்பலியில் மறையுரையாற்றிய திருப்பீட நலப்பணி அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, இவ்வாறு கூறினார்.
இப்புதன் திருப்பலியின் இரு வாசகங்களில் குறிப்பிடப்பட்ட சாம்சன் மற்றும் திருமுழுக்கு யோவான் இவர்களின் பிறப்பு இறைவன் தந்த வரம் என்பதைச் சுட்டிக்காட்டியப் பேராயர் Zimowski, மனிதர்கள் பார்வையில் தாழ்வாகக் கருதப்பட்ட இரு பெண்கள் கடவுளின் வல்லமையால் இரு முக்கிய விவிலிய நாயகர்களின் அன்னையராக மாறும் பேறு பெற்றதையும் எடுத்துக் கூறினார்.
நோயுற்றிருப்போருக்குப் பணிகள் புரிவது மிகக் கடினமான ஓர் அழைப்பு என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் Zimowski, நம்பிக்கையைக் கொணரும் கிறிஸ்மஸ் பெருவிழா கூறும் முக்கியச் செய்தியை தங்கள் பணிகளால் உலகிற்கு உணர்த்தும் நலப்பணியாளர்களை வாழ்த்துவதாகக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.