டிச.19, 2012. திருவருகைக்காலத்தில் இருக்கும் நமக்கு, இது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு
முன்னான கடைசி புதன். கிறிஸ்து பிறப்பு விழா எனும்போது, இயேசு பாலனைத் தொடர்ந்து நம்
கண் முன் வரும் முதல் நபர் அன்னை மரியாவே. எனவே, இப்புதன் பொதுமறைபோதகத்தில் அன்னை மரியாவின்
விசுவாசம் குறித்து தன் சிந்தனைகளை, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் கூடியிருந்த
திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளோடுப் பகிர்ந்துகொண்டார் பாப்பிறை 16ம் பெனடிக்ட். நம்பிக்கை
ஆண்டின் நம் மறைக்கல்வி போதனையில், இந்த திருவருகைக் காலத்தின் இறுதி நாட்களில், அனனைமரியின்
விசுவாசம் குறித்து சிந்திப்பது பொருத்தமுடையதாக இருக்கும் எனத் தன் உரையைத் துவக்கினார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட். மங்கள வார்த்தை அறிவித்தபோது இறைத்தூதர் கபிரியேல், அன்னை
மரியை நோக்கி ‘கடவுள் உம்மோடு’ எனக்கூறி, அவரின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு
விடுத்தார். இந்த மகிழ்வானது, இறைமக்களின் மெசியா குறித்த நம்பிக்கையோடு தொடர்புடையதாகும்.
சியோனின் மகளாம் இறைமக்களின் இந்த நம்பிக்கை, தற்போது அன்னைமரியில் நிறைவுபெறுகிறது.
இறைவார்த்தைக்கு கீழ்ப்படிய அன்னைமரியை வடிவமைத்து அவர் இதயத்தை நிறைத்த அருளின் கனியே
இது. ஆபிரகாமைப் போல் அன்னைமரியின் விசுவாசமும், எதுவும் தெளிவாகத் தெரியாத நிலையிலும்
இறைவனின் வாக்குறுதியில் முழு நம்பிக்கை கொள்வதில் இணைந்ததாக இருந்தது. இறைவனின் திட்டங்கள்
சிலவேளைகளில் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக, தெளிவற்றதாக, சிலுவை எனும் மறையுண்மையைத்
தழுவுவதை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை நம்மைப் போலவே அன்னைமரியும் தன் வாழ்வில் உணர்ந்திருத்தார்.
மங்கள வார்த்தை அறிவிப்பின்போதும் அன்னைமரி, இறைத்தூதரின் வார்த்தைகளைத் தன் இதயத்தில்
நிறுத்தி தியானித்தார் என்பது குறிப்பிடும்படியானது. விசுவாசம் என்பது இறைவிருப்பத்திற்கு
முற்றிலுமாகக் கீழ்ப்படிதலுடன் இருக்கும் அதேவேளை, அவ்விருப்பத்தை உய்த்துணரவும், புரிந்துகொள்ளவும்,
ஏற்கவும் தினமும் முயலவேண்டும் என்பதை அன்னைமரியின் எடுத்துக்காட்டு நமக்கு எடுத்துரைக்கின்றது.
இந்தப் புனித காலத்தில் நம் இதயங்களிலும், நம் இந்த உலகிலும் இறையருளுக்கான கதவுகளைத்
திறக்கும் தாழ்ச்சியுடைய, நம்பிக்கைமிகு விசுவாசத்தில் நாம் வளர, இயேசு கற்பித்த செபம்
நமக்கு உதவுவதாக. இவ்வாறு, தன் இவ்வாரப் புதன் பொதுமறைபோதகத்தை அங்கு குழுமியிருந்த
அனைவருக்கும் வழங்கிய திருத்தந்தை, இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.