அயர்லாந்து ஆயர்கள் - அரசு எடுத்திருக்கும் முடிவு நம் அனைவர் மனதிலும் பெரும் கவலையை
உருவாக்க வேண்டும்
டிச.19,2012. கருக்கலைப்பைச் சட்டமாக்க அயர்லாந்து அரசு எடுத்திருக்கும் முடிவு நம் அனைவர்
மனதிலும் பெரும் கவலையை உருவாக்க வேண்டும் என்று அயர்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர். கருக்கலைப்பைச்
சட்டமாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதென்று டிசம்பர் 18, இச்செவ்வாயன்று அயர்லாந்து
அரசு எடுத்துள்ள முடிவுக்கு, கர்தினால் Seán Brady, பேராயர்கள் Diarmuid Martin, Dermot
Clifford, Michael Neary, ஆகிய நால்வரும் இணைந்து எதிர்ப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். கருவுற்ற
தாய், கருவில் வளரும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் தற்போது அயர்லாந்தில்
சட்டங்கள் நிலவி வருகின்றன என்றும், இச்செவ்வாயன்று அரசு எடுத்துள்ள முடிவின் ஒரு தொடர்
முயற்சியாக, கருக்கலைப்பு சட்டமாக மாறினால், இந்த பாதுகாப்பு நீக்கப்படும் என்றும் ஆயர்கள்
கவலையை வெளியிட்டுள்ளனர். அக்டோபர் மாதம் Savita Halappanavar என்ற பெண்ணுக்கு கருக்கலைப்பு
மறுக்கப்பட்டதால் அவர் இறந்தார் என்ற செய்தி, அயர்லாந்தில் இப்பிரச்சனையைக் குறித்த கருத்து
வேறுபாடுகளை வளர்த்துள்ளது. கருக்கலைப்பை ஆதரிக்காத அயர்லாந்தில் கருவுற்ற ஒரு இலட்சம்
பெண்களில் மூன்று பேரே பிள்ளை பிறப்பு நேரத்தில் இறந்துள்ளனர். ஆனால், கருக்கலைப்பை ஆதரிக்கும்
ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் கருவுற்ற ஒரு இலட்சம் பெண்களில் 14 பேர் பிள்ளை
பிறப்பு நேரத்தில் இறந்துள்ளனர் என்று CNA கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியுள்ளது.