திருப்பீடச் செயலர் : திருப்பீடத்தூதர் பேராயர் Ambrose Madtha, ஐவரி கோஸ்ட் நாட்டின்
ஒப்புரவுக்குச் சிறப்புப் பணியாற்றியுள்ளார்
டிச.17,2012. அனைத்து மக்களுடனான பேச்சுவார்த்தைகளில் திறந்த மனப்பான்மையுடனும் தாழ்ச்சியுணர்வுடனும்
ஆடம்பரமின்றியும் செயல்பட்ட மறைந்த திருப்பீடத்தூதர் பேராயர் Ambrose Madtha, ஐவரி கோஸ்ட்
நாட்டின் ஒப்புரவுக்குச் சிறப்புப் பணியாற்றியுள்ளார் எனப் பாராட்டினார் திருப்பீடச்
செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே. ஐவரி கோஸ்ட் நாட்டுக்குத் திருப்பீடத்தூதராகப்
பணியாற்றி இம்மாதம் 8ம் தேதி அந்நாட்டில் வாகன விபத்தில் உயிரிழந்த பேராயர் Madthaவின்
நினைவாக இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய கர்தினால்
பெர்த்தோனே, தான் பணியாற்றிய நாட்டு மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவராக விளங்கிய
அவர் சென்றவிடமெல்லாம் மதிக்கப்படுபவராகவும் இருந்தார் என்றார். மறைந்த பேராயர் Madtha
தனது கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றியதிலும், கிறிஸ்துவில் முழுவிசுவாசம் கொண்டிருந்ததிலும்
நம் அனைவருக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளார் எனவும் கூறினார் கர்தினால் பெர்த்தோனே. தான்
சந்தித்த அனைத்து மக்களிடமும் கருணையுடனும், புரிந்துகொள்ளும் தன்மையுடனும் பொறுமையுடனும்
பேராயர் Madtha நடந்து கொண்டார் என்ற பாராட்டையும் தனது மறையுரையில் முன்வைத்தார் திருப்பீடச்
செயலர் கர்தினால் பெர்த்தோனே.