தேவ அழைத்தல் செப நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தி
டிச.15,2012. "தேவ அழைத்தல் என்பது விசுவாசத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையின்
அடையாளம்" என்ற தலைப்பில் வரும் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இடம்பெறவுள்ள தேவ அழைத்தல் செப
நாளுக்கான செய்தியை இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், திருத்தந்தை
6ம் பவுலால் உருவாக்கப்பட்ட தேவ அழைத்தல் செப நாளும் வரும் ஆண்டு 50ம் ஆண்டு நிறைவைச்
சிறப்பிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளத் திருத்தந்தை, இயேசு உயிர்ப்பு ஞாயிறுக்குப்
பின் வரும் நான்காம் ஞாயிறன்று கொண்டாடப்படும் இந்நாளில், உலகம் முழுவதும் ஒன்றிணைந்து
எழுப்பும் செபங்கள் தேவ அழைத்தல்களை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். நம்
வாழ்வின் பாதைகளில் நடந்துவரும் உயிர்த்த இயேசுவால் மட்டுமே, நம்பிக்கைக்கான நம் தாகத்தைத்
தணிக்க முடியும் என அச்செய்தியில் கூறும் திருத்தந்தை, இயேசுவைப் பின்தொடர அவர் இன்றும்
தொடர்ந்து நமக்கு அழைப்பு விடுத்து வருகின்றார் என மேலும் கூறியுள்ளார். இறைவனுடன்
நாம் கொள்ளும் தொடர்பின் வழியாகவும், உண்மையான கலந்துரையாடல் மூலமாகவும் தேவ அழைத்தல்
பிறக்கிறது என்பதைத் தன் செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.