எருசலேமில் உள்ள ஒரு பழம்பெரும் நினைவுச் சின்னத்தில் சேதங்கள்
டிச.14,2012. பாரம்பரியக் கருவூலமான தங்கள் துறவுமடம் ஏழாவது முறையாக இழிவு படுத்தப்பட்டுள்ளது,
ஏழாவது முறையல்ல, எழுபத்து ஏழு முறை இழிவு படுத்தப்பட்டாலும் இதனைச் செய்தவர்களை நாங்கள்
மன்னிக்கிறோம் என்று எருசலேம் துறவு மடத்தின் தலைவர் அருள்தந்தை Claudius கூறினார். எருசலேமில்
உள்ள புனித சிலுவை கிரேக்க ஆர்த்தடாக்ஸ் துறவுமடம் 11ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு பழம்பெரும்
நினைவுச் சின்னம். இத்துறவு மடத்தின் சுவர்களில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வெறுப்பு
கலந்த வார்த்தைகளை இச்செவ்வாய் நள்ளிரவில் எழுதி வைத்துள்ளன. இதனைச் செய்தவர்கள் யூத
மதத்தின் அடிப்படைவாதக் குழு என்று கருதப்படுகிறது. பிற மதங்களுக்கு மரியாதை தருவது யூதர்களின்
பழக்கம் என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, இச்செயல்களைச் செய்தவர்களைச்
சட்டம் தண்டிக்கும் என்று கூறினார். இத்துறவு மடத்தில் மட்டுமின்றி, மற்றோர் ஆர்மீனிய
கல்லறையிலும் இக்கும்பல் சேதங்களை உருவாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.