தென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது "பிக்குகள் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல்"
டிச. 11, 2012. இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக
சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று புத்த பிக்குகள் தலைமையில் வந்த
கூட்டம் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளது. ஞாயிறு காலையில் தேவாலயத்தில் வழிபாடு நடந்துகொண்டிருந்த
நேரத்தில் புத்த பிக்குகள் சுமார் 80 பேர் தலைமையில் வந்த ஆயிரம் பேர் அடங்கிய கும்பல்
ஒன்று தேவாலயத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தும்,
தேவாலயத்துக்குள் இருந்த கண்ணாடிகளையும் பிற பொருட்களையும் உடைத்தும் சேதப்படுத்தினர்
என்று தேவாலய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். தாக்குதலின்போது தேவாலயத்தில் பிரார்த்தனை
செய்துகொண்டிருந்தவர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
ரூபாய் 6 இலட்சம் அளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 11 வருடங்களாக
இத்தேவாலயம் வீரகட்டிய பகுதியில் இருந்துவருகிறது என்றாலும் புத்த பிக்குகளின் அனுமதி
பெற்றே அது செயலாற்ற முடியும் என்பதுபோன்ற அழுத்தங்களை அது சமீபகாலமாக எதிர்கொண்டு வருகிறது
என்று அந்த தேவாலயத்தின் பிரதிநிதி மேலும் குறிப்பிட்டார்.