டிச.10,2012. நுகர்வுக் கலாச்சாரத்தில் தன் மகிழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில்,
கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் எவ்விதம் கொண்டாடுவது எனப் புனித திருமுழுக்கு யோவான் நமக்குக்
கற்றுத் தருகிறார் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். உரோம் நகரின் தூய பேதுரு
பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இஞ்ஞாயிறு மூவேளை
செப உரை வழங்கியத் திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பு விழா என்பது வெளிப்புற கொண்டாட்டங்களை
மட்டும் குறிப்பதாக இல்லாமல், உண்மை மகிழ்வையும், வாழ்வையும், அமைதியையும் கொணரும் இறைமகனின்
வருகையைச் சிறப்பிக்கும் விழாவாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். இஞ்ஞாயிறு
திருப்பலி வாசகம் புனித திருமுழுக்கு யோவானைக் குறித்துப் பேசுவதைப் பற்றிக் குறிப்பிட்டத்
திருத்தந்தை, இறைமகனின் முன்னோடியாக நோக்கப்படும் திருமுழுக்கு யோவான், பாலைநிலத்தில்
முழங்கும் குரலாகவும், ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்க அழைப்பு விடுப்பவராகவும் புனித
லூக்கா நற்செய்தியில் விவரிக்கப்படுகிறார் என்று கூறினார். புனித திருமுழுக்கு யோவானின்
வார்த்தைக்கு நாம் செவிமடுத்து, வார்த்தையாம் இறைமகனுக்கு நம் மனதில் இடமளிப்போம் என,
தன் மூவேளை செப உரையின்போது மெடலும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.