2012-12-10 16:28:53

டிச.11 திருவருகைக்காலச் சிந்தனை - அருள்பணி. இயேசு கருணா


RealAudioMP3 “ஆயனைப்போல தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார். சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.” (எசாயா 40:11)
ஜெர்மானியப் படை தனது நாசிச வெறியின் உச்சத்தில் இருந்த காலம். ஒரு இருண்ட சிறைச்சாலை. தினந்தோறும் பல்வேறு வகையான கொடுமைகள். பல்வேறு வகையில் சாவு. வாழ்வா, சாவா என்பதே தினசரி கனவாகிப் போனது சிறைவாசிகளுக்கு. மறுபுறம் சண்டை சச்சரவுகள். கைதிகளுக்குள்ளே கலவரங்கள். புதிதாக வரும் கைதிகள் ஏற்கனவே இருக்கும் கைதிகளின் கையில் சிக்கியும் துன்புற்றனர். எந்த நேரமும் குழப்பம். ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கும் கலாச்சாரம். நாட்கள் நகர்ந்தன. அன்றொரு நாள் மாலை வேளை. கைதிகள் வேலை முடித்த நேரம். படைத்தளபதி விரைந்து வருகிறான். ஒரு மண்வெட்டியைக் காணவில்லை. அதற்கான விசாரணைக்காக எல்லாக் கைதிகளும் அழைத்து வரப்படுகின்றனர். யாரும் உண்மையை ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. படைத்தளபதிக்குப் பதற்றம். மண்வெட்டியைப் பயன்படுத்தி யாராவது தப்பி ஓடி விட்டால் தனது பணி பறிபோய்விடும். அனைத்துக் கைதிகளையும் வரிசையாக நிறுத்திச் சுடக் கட்டளையிடுகிறான். அனைவருக்கும் பயம். வரிசையாக நின்றவுடன் ஒரு கைதி மட்டும் முன்னே வந்து தான் திருடியதை ஒப்புக் கொள்கிறான். படைவீரர்கள் பாய்ந்தோடிப் பிடித்து அவனைச் சுட்டுக் கொள்கின்றனர். ஆழ்ந்த அமைதி. அனைவரும் தத்தம் அறைகளுக்குச் செல்கின்றனர். படைத்தலைவன் மீண்டும் சரிபார்க்க மண்வெட்டிகள் அனைத்தும் சரியாக இருக்கின்றன. அனைவருக்கும் ஆச்சர்யம். நிசப்தம். எதற்காக அந்த மனிதன் பிறருக்காகத் தனது உயிரை இழந்தான்? அன்றிலிருந்து ஒரு புதிய நிலை சிறைச்சாலையில்: கைதிகள் அனைவரும் ஒருவர் ஒருவருடன் அன்புடன் பழகினர். படைவீரர்கள் துன்புறுத்தினாலும் மகிழ்ச்சியாக இருந்தனர். புதிய கைதிகளை நன்முறையில் நடத்தினார்கள். எப்படி இவ்வளவு மாற்றம்? எல்லாம் அந்த ஒரு மனிதனின் தற்கையளிப்பு? அந்த மனிதனுடன் இருந்த அனுபவம். இறைவனின் தற்கையளிப்பினால் நாம் மீட்படைந்தோம். அந்தத் தற்கையளிப்பை நாமும் நம் குடும்பத்தில், சமூகத்தில் செயல்படுத்தினால் நாமும் நல் ஆயர்களே!








All the contents on this site are copyrighted ©.