டிச.08,2012. தலித் விடுதலை ஞாயிறு இந்திய கிறிஸ்தவர்களால் இம்மாதம் 9ம் தேதி சிறப்பிக்கப்படுவதை
முன்னிட்டு சிறப்புச்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், பிற்படுத்தப்பட்டோருக்கான இந்திய
ஆயர் பேரவை அலுவலகத்தின் தலைவர் ஆயர் நீதிநாதன். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 10ம்
தேதி கடைபிடிக்கப்படும் மனித உரிமைகள் தினத்தையொட்டிவரும் ஞாயிறன்று தலித் விடுதலை ஞாயிறு
சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாண்டு, 'தடைகளை உடைத்து சரிநிகர் உலகை கட்டியெழுப்புவோம்'
என்ற தலைப்புடன் தலித் விடுதலை ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது. சமூகப்பாகுபாட்டு நிலைகள்,
ஏழ்மை, கல்வியில் பின்தங்கிய நிலை ஆகியவைகளை தலித் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்குவதாக தன்
செய்தியில் கூறும் ஆயர் நீதிநாதன், இப்போதும் தீண்டத்தகாதவர்களாக இம்மக்கள் நடத்தப்படுவது
குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளார். சமூகத்தில் மட்டுமல்ல, தலத்திருஅவைக்குள்ளும்
இத்தகைய நிலைகள் இருப்பது குறித்து தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் செங்கல்பட்டு
ஆயர்.