டிச.10, 2012. திருவருகைக்காலச் சிந்தனை - அருள்பணி. இயேசு கருணா
“தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.”
(எசாயா 35:3) 90 வயது வரை செல்வச் செழிப்பாக வாழ்ந்த ஒரு வயதான பாட்டி தான் இறக்கும்
போது தன் கையில் ஒரு ஸ்பூனையும், ஃபோர்க்கையும் பிடித்தவாறு அடக்கம் செய்ய வேண்டும் என்று
தன் பிள்ளைகளைக் கேட்டுக் கொண்டாராம். ஏன் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்: “ஒவ்வொரு
முறை ஹோட்டலுக்க உணவருந்தச் செல்லும் போது இறுதியில் தட்டை டேபிளில் இருந்து பணியாளர்
எடுக்கும்போது, ‘ஸ்பூனையும் ஃபோர்க்கையும் வைத்திருங்கள். தி பெஸ்ட் இஸ் யெட் டு கம்
(The best is yet to come) என்பாராம். என் வாழ்விலும் எல்லாம் முடியவில்லை. தி பெஸ்ட்
இஸ் யெட் டு கம்.” அசீரியப் படையெடுப்பு, பாபிலோனியாவிற்கு நாடுகடத்துதல் என்று பரிதவித்து,
ஆலயம் இல்லாமல், ஓய்வு நாள் இல்லாமல், திருச்சட்டம் இல்லாமல் வாடிய இஸ்ராயேல் மக்களுக்கு
நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றார் யாவே இறைவன். இவையெல்லாம் மறைந்து விடும் என்றும்,
பாலைநிலமும், பொட்டல் நிலமும் லீலிபோல் பூத்துக் குலுங்கும் எனவும், பார்வையற்றோரின்
கண்கள் பார்க்கும் எனவும், காதுகேளாதோரின் செவிகள் கேட்கும் எனவும், அவர்கள் முகம் என்றுமுள
மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும், அவர்கள் மகிழ்ச்சியும், பூரிப்பும் அடைவார்கள், துன்பமும்,
துயரமும் பறந்துவிடும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றார். நம் வாழ்விலும் நாம் தளர்ந்து,
தள்ளாடும் நேரங்களில் நமக்குக் கைகொடுப்பது இந்த நம்பிக்கைதான். நம்பிக்கை – அதானே எல்லாம்.
தி பெஸ்ட் இஸ் யெட் டு கம்!