அன்னைமரியாவின் அமல உற்பவத் திருநாளில் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை
டிச.08,2012. இறைவனுக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தவராக, இறைவனின் ஒத்துழைப்பாளராகச்
செயல்பட்ட அன்னைமரியாவின் அமல உற்பவம் குறித்து நடைபெறும் நம்பிக்கையாண்டில் வலியுறுத்த
விழைகிறேன் என்று இச்சனிக்கிழமை வழங்கிய மூவேளை செப உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். அன்னைமரியா பேறுபெற்றவர், ஏனெனில், இறைவன் மீது முழு நம்பிக்கைக்
கொண்டு, அவருக்கு 'ஆம்' என்று பதிலளித்ததன் வழியாக, இறைமகன் மனு உரு எடுக்க உதவினார்
என்று கூறியத் திருத்தந்தை, அன்னைமரியாவின் வழியாக நாம் இறையருளைப் பெறுகிறோம் என்று
எடுத்துரைத்தார். பழைய ஏற்பாட்டில் காணப்படும் உருவகங்கள், தூய பவுல் எபேசியருக்கு
எழுதியத் திருமடலில் காணப்படுபவை, மற்றும் திருஅவைத் தந்தையர்கள் அன்னைமரியாவைப் பற்றி
எடுத்துரைத்துள்ளவைகள் போன்றவைகளையும் தன் மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை. மூவேளை
செப உரையின் இறுதியில், பிலிப்பின்ஸ் சூறாவளியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும்
பேசியத் திருத்தந்தை, அம்மக்களுடன் தான் உள்ளத்தால் ஒன்றித்திருப்பதாகவும், அவர்களுக்கு
தன் செபங்களை அனுப்புவதாகவும் உறுதி கூறினார்.