2012-12-07 16:09:53

வாழ்வுக்கு ஆதரவு, மதச் சுதந்திரம், திருமண உறவு ஆகியவற்றை ஆதரிக்க அமெரிக்க ஆயர்கள் அழைப்பு


டிச.07,2012. வாழ்வுக்கு ஆதரவு, மதச் சுதந்திரம், திருமண உறவு ஆகிய உயர்ந்த கொள்கைகளை, கத்தோலிக்க மக்கள் அனைவரும் போற்றி வளர்க்கவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இக்கொள்கைகளை ஆதரிக்கும் ஐந்து செயல் திட்டங்கள் அடங்கிய ஓர் அறிக்கையை ஆயர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டனர். கிறிஸ்மஸ் காலத்தைத் தொடர்ந்து, இச்செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செயல் திட்டங்கள் ஒவ்வொரு கத்தோலிக்கரின் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக வேண்டும் என்றும், இக்கொள்கைகளை வளர்க்க ஒவ்வொருவரும் செபம், தியாகம் இவற்றை ஏற்க வேண்டும் என்றும் அமெரிக்க ஆயர் பேரவையின் குடும்பநலப் பணிக்குழுவின் தலைவர் பேராயர் Salvatore Cordileone கூறினார்.
கிறிஸ்மஸ் விழாவைத் தொடர்ந்து வரும் திருக்குடும்பத் திருவிழாவுடன் ஆரம்பமாகும் இம்முயற்சிகள் 2013ம் ஆண்டு நம்பிக்கை ஆண்டின் இறுதி ஞாயிறான கிறிஸ்து அரசர் திருநாளன்று முடிவடையும் என்றும் ஆயர்களின் இவ்வறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.