டிச.03,2012. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தில் இஞ்ஞாயிறன்று முத்திப்பெற்றவராக உயர்த்தப்பட்டுள்ள
தேவசகாயம், மிகப்பெரிய, அதேவேளை உன்னத, இந்திய நாட்டின் கிறிஸ்தவர்களின் விசுவாசம் கட்டிக்காக்கப்பட
உதவுவாராக என இஞ்ஞாயிறு மூவேளை செபஉரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தேவசகாயம்பிள்ளையின்
முத்திப்பேறுப்பட்டம் குறித்து மகிழும் கோட்டாறு மக்களுடன் இணைந்து நாமும் மகிழ்ச்சி
கொள்வோம் என்ற திருத்தந்தை, அம்மக்களுக்கான என் சிறப்பான வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்
என்றார். திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறில் இடம்பெறும் இந்த நிகழ்வு, கிறிஸ்துவுக்கான
அவரின் சாட்சிய வாழ்வின் எடுத்துக்காட்டை நமக்குத் தருவதாக உள்ளது என மேலும் கூறினார்
பாப்பிறை. தன் மூவேளை செப உரையின்போது, 'திருவருகை' என்ற வார்த்தையின் அர்த்தம் குறித்து
விளக்கிக்கூறியத் திருத்தந்தை, இத்திங்களன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட உலக மாற்றுத்திறனாளிகள்
தினம் குறித்தும் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார். கடவுளின் வருகை, இவ்வுலகில்
கடவுளின் இருப்பைக் குறிக்கின்றது என்ற திருத்தந்தை, முதல் வருகை என்பது மனிதனாக பிறப்பெடுத்தது,
இரண்டாம் வருகை என்பதோ, உலக முடிவில் மாட்சியோடு வருவது என்று கூறி விளக்கினார்.