முதுபெரும் தலைவர் Tawadros II : எகிப்துக்குத் தேவை செபம், அன்பு, ஞானம்
நவ.30,2012. எகிப்தின் முன்வரைவு அரசியல் அமைப்பு, அந்நாட்டின் முற்போக்குச் சிந்தனையாளர்கள்
மற்றும் கிறிஸ்தவ உறுப்பினர்களின் பங்கேற்பு இன்றி இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களால்
இவ்வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார் அந்நாட்டின்
ஆர்த்தடாக்ஸ் காப்டிக் கிறிஸ்தவ சபையின் புதிய தலைவர் இரண்டாம் Tawadros இந்த அரசியல்
அமைப்பு, முஸ்லீம் குருக்களுக்குச் சட்டத்தின்மீது அதிக அதிகாரம் அளிக்கும் எனவும்,
பேச்சு சுதந்திரம், சமய சுதந்திரம், பெண்களின் உரிமைகள் மற்றும் பிற சுதந்திரங்கள் மீது
கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் என மனித உரிமை வல்லுனர்கள் கூறுகின்றனர். எகிப்தின்
தற்போதைய நிலவரம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த காப்டிக் கிறிஸ்தவ
சபையின் முதுபெரும் தலைவர் 2ம் Tawadros, தற்போது எகிப்துக்குச் செபம், அன்பு மற்றும்
ஞானம் தேவை என்று கூறினார். இந்த அரசியல் அமைப்பை இச்சனிக்கிழமையன்று அரசுத்தலைவரிடம்
கொடுப்பதற்கும் அந்நாட்டின் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது எனவும், இது குறித்த பொதுமக்கள்
கருத்து வாக்கெடுப்பு 30 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டுமெனவும் மனித உரிமை வல்லுனர்கள்
கூறுகின்றனர்.