காங்கோ வன்முறைகள் குறித்து ஆப்ரிக்க ஆயர்கள் கண்டனம்
நவ.27,2012. காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் குறித்து ஆப்ரிக்க
நாடுகளின் ஆயர் பேரவைத் தலைவர்களும் அப்பகுதியின் காரித்தாஸ் அமைப்புகளின் தலைவர்களும்
இணைந்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். வடபகுதியில் கனிம வளம் நிறைந்த கிவு மாநிலத்தைக்
கைப்பற்ற புரட்சிக்குழு ஒன்று அரசுத் துருப்புகளுக்கு எதிராகப் போர் நடத்திவருவது குறித்து
கவலையை வெளியிட்ட ஆப்ரிக்க ஆயர்கள், பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இப்போரினால் உயிரிழந்தும்
தங்கள் உடமைகளை இழந்து அனாதைகளாகியும் வருவதாக தெரிவித்தனர். மோதல்களால் குடிபெயரும்நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ள மக்கள், தட்ப வெப்ப நிலை சீர்கேடு, பசி, பாலியல் வன்செயல், சிறார்கள்
ஆயுதம் தாங்க கட்டாயப்படுத்தப்படல் போன்ற உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும்
தெரிவிக்கும் ஆப்ரிக்க ஆயர்கள், மனித மாண்பு காக்கப்பட உதவுவதில் அனைத்துலக சமுதாயத்தின்
உதவியையும் வேண்டியுள்ளனர்.