2012-11-24 15:10:05

நவம்பர் 25, கிறிஸ்து அரசர் பெருவிழா : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இந்த ஞாயிறு நாம் கொண்டாடுவது கிறிஸ்து அரசர் திருநாள். இந்தத் திருநாளைப் பற்றி நினைக்கும்போது எனக்குள்ளே ஒரு சங்கடம். அதை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிறிஸ்துவைப் பலகோணங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன், தியானித்திருக்கிறேன். ஆயனான கிறிஸ்து, மீட்பரான கிறிஸ்து, வழியாக, ஒளியாக, வாழ்வாக, உணவாக, வரும் கிறிஸ்து... இவ்விதம் பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது மன நிறைவு கிடைத்திருக்கிறது.
ஆனால் அரசரான கிறிஸ்து அல்லது கிறிஸ்து அரசர் என்ற எண்ணம் மனதில் சங்கடங்களை விதைக்கிறது. கிறிஸ்து, அரசர், இரண்டும் நீரும் நெருப்பும் போல ஒன்றோடொன்று பொருந்தாமல் இருப்பது போன்ற ஒரு சங்கடம். ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது ஓர் உண்மை தெரிந்தது. சங்கடம் கிறிஸ்து என்ற வார்த்தையில் அல்ல, அரசர் என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும் மனதில் எழும் எண்ணங்கள், மனத்திரையில் தோன்றும் காட்சிகள்தாம் இந்த சங்கடத்தின் முக்கிய காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம,... இப்போது சொன்ன பல வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தங்கள் கூட தெரியாது, ஆனால் இந்த முழக்கங்களுக்குப் பின் மனத்திரையில் தோன்றும் உருவம் எது? பட்டும், தங்கமும், வைரமும் மின்ன உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்து வரும் ஓர் உண்டு கொழுத்த உருவம்... சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், ஆடம்பரமாக வாழப் பிறந்தவர்...
அரசர் என்றதும் கும்பலாய், குப்பையாய் வரும் இந்த கற்பனைக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. அப்புறம் எப்படி இயேசுவை அரசர் என்று சொல்வது? சங்கடத்தின் அடிப்படையே இதுதான்.

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில் இயேசுவும் ஓர் அரசர், ஓர் அரசை நிறுவியவர். அந்த அரசுக்குச் சொந்தக்காரர்... அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை. இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். அப்படிச் சேர்ந்து வரும் மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கிய பணி. இயேசுவுக்கு அரியணை இல்லையா? உண்டு. தந்தைக்கும், இயேசுவுக்கும் அரியணைகளா? ஆம். இந்த அரசில் யார் பெரியவர் என்ற கேள்வி இல்லாததால், இந்த அரசில் எல்லாருக்குமே அரியணை, எல்லாருக்குமே மகுடம், எல்லாரும் இங்கு அரசர்கள்... இந்த அரசர்கள் மத்தியில் இயேசு ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று நாம் தேடினால், ஏமாந்துபோவோம். காரணம்?... அவர் நம் பாதங்களைக் கழுவிக்கொண்டு இருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.

‘ராஜாதி ராஜ’ என்று நீட்டி முழக்கிக் கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு... எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இரண்டும் நீரும் நெருப்பும் போல் ஒன்றோடொன்று கொஞ்சமும் பொருந்தாதவை. இந்த இரு வேறு உலகங்களையும், அரசுகளையும், அரசர்களையும் இன்றைய நற்செய்தி நமக்குத் தருகின்றது.
யோவான் நற்செய்தி 18: 33-37
அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்... இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்றார். பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர் என்றார்.

இருவேறு உலகங்களின் பிரதிநிதிகள் - பிலாத்தும், இயேசுவும். இந்த பிலாத்து யார் என்று புரிந்து கொண்டால், இயேசு யார் என்று, அதுவும் இயேசு எந்த வகையில் அரசர் என்று புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

இந்த பிலாத்து யார்?
செசாரின் கைபொம்மை இந்த பிலாத்து. இவரது முக்கிய வேலையே, யூதர்களிடம் வரி வசூலித்து உரோமைக்கு அனுப்புவது.. தன் ஆளுகைக்கு உட்பட்ட யூதப் பகுதியில் எந்த விதக் கலகமும் இல்லாமல் பார்த்துக்கொள்வது, கலகம் என்று எழுந்தால், எள்ளளவும் தயக்கமில்லாமல், கொடூரமாக அதை அடக்குவது... இந்தப் பதவிக்கு வர பிலாத்து பல பாடுகள்பட வேண்டியிருந்தது. அவரது கணக்குப்படி, அவர் அடையவேண்டிய பதவிகள் இன்னும் பல உள்ளன. இறுதியாக, செசாரின் வலது கையாக மாறவேண்டும், முடிந்தால் செசாராகவே மாறவேண்டும். அதற்காக எதையும் செய்யத் துணிந்தவர் பிலாத்து. பதவி ஒன்றே இரவும், பகலும் அவர் சிந்தனையை, மனதை ஆக்ரமித்ததால், வேறு எத்தனையோ உண்மைகளுக்கு அவர் வாழ்வில் இடமில்லாமல் போய்விட்டது. இப்போது, அந்த மற்ற உண்மைகளை நினைத்துப்பார்க்க, அவருடைய மனசாட்சியைத் தட்டி எழுப்ப ஒரு சவால் வந்திருக்கிறது. அதுவும் பரிதாபமாக, குற்றவாளியென்று அவர் முன்னால் நிறுத்தப்பட்டுள்ள ஒரு தச்சனின் மகன் இயேசுவின் மூலம் வந்திருக்கும் சவால் அது. அந்த நேரத்தில் பிலாத்தின் மனதில் ஓடிய எண்ணங்களை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன்:
என் வாழ்வின் இலட்சியங்கள் எல்லாம், பதவிகள் பெறவேண்டும், கிடைத்தப் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும், இன்னும் உயர் பதவிகளை அடைவதற்கு மேலதிகாரிகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். இப்படியே வாழ்ந்து பழகிவிட்ட நான் இன்று குழம்பிப் போயிருக்கிறேன். நாசரேத்தூரில் பிறந்ததாகச் சொல்லப்படும் இயேசு என்ற இந்த இளைஞனை, ஒரு குற்றவாளி என்று என் முன் கொண்டு வந்திருக்கின்றனர். இவர் மீது எக்குற்றமும் இல்லை என்ற உண்மையை என்னால் உணர முடிகிறது. இவரைப் பார்த்ததிலிருந்து, இவரிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலிருந்து என் மனசாட்சி என்னைக் குற்றவாளியாக்கியுள்ளது. என் மனசாட்சி மட்டுமல்லாமல், என் மனைவியும் என்னைக் குழப்புகிறாள். இந்த இளைஞனை அநியாயமாகக் கொல்லச் சொல்கிறார்கள் மதத்தலைவர்கள். மக்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இவர்களது ஆவேசமான ஓலைங்களை எல்லாம் மீறி, என் மனசாட்சியின் குரலுக்கு, என் மனைவியின் சொல்லுக்கு நான் கீழ்ப்படிய நினைத்தேன். ஆனால், என் பதவிக்கு ஆபத்து வரும் போல் தெரிகிறது. இவனை நீர் விடுவித்தால், நீர் செசாரின் நண்பரல்ல... தன்னை அரசனாக்கிக் கொள்ளும் எவனும் செசாரை எதிர்க்கிறான்.என்று இவர்கள் சொன்னது என்னை நிலைகுலையச் செய்துள்ளது. எனக்கு முன் நிற்கும் இந்தப் பரிதாபமான இளைஞன் ஓர் அரசனா? அதுவும் செசாருக்கு எதிராக, போட்டியாக எழக்கூடிய அரசனா? நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால், ஏன் இந்த விபரீத விளையாட்டு? எனக்கு என் பதவிதான் முக்கியம், அதுதான் என் வாழ்க்கை. என் மனசாட்சியோ, என் மனைவியோ முக்கியமல்ல.

இப்படி பதவிக்காக தன் மனசாட்சியையும், சொந்த வாழ்வையும் பணயம் வைக்கும் பரிதாபமான பிலாத்துக்கு முன் நிற்கும் இயேசு இயேசுவின் மனதிலும் எண்ணங்கள் ஓடியிருக்கும். இதோ, மற்றொரு கற்பனை:
பாவம் இந்த பிலாத்து, இவர்மட்டும் தன் ஆழ் மனதில் உணரும் உண்மைக்குச் செவிசாய்த்தால், இந்த உரோமையப் பதவிகளை விட உயர்வான ஒரு நிலையை நானும், தந்தையும் நிரந்தரமாக இவருக்கு தருவோமே. உண்மையைக் காண மறுக்கும் இவரது உள்ளக்கதவின் முன் நின்று நான் தட்டுகிறேன். தட்டிக்கொண்டே இருப்பேன். இவர் கட்டாயம் ஒருநாள் என் குரலைக் கேட்பார், இதயத்தைத் திறப்பார். அன்று நானும் என் தந்தையும் இவர் உள்ளத்தில் அரியணை கொள்வோம், இவரையும் அரியணையில் ஏற்றுவோம்.

இரு வேறு துருவங்களிலிருந்து வந்த உள்ளக் குரல்களை, குமுறல்களைக் கேட்டோம். இந்த இருவரில் யார் பெரியவர் என்பதில் இன்னும் சந்தேகமா? தன் மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளைக் காண மறுத்து, தன் பதவியை, அரியணையைக் கெட்டியாகப் பிடித்தவண்ணம் அமர்ந்திருக்கும் ஆளுநர் பிலாத்தா? பதவி என்ன... உயிரே பறிபோனாலும் உண்மையை நிலைநாட்டுவதே முக்கியம் என்று பதட்டம் ஏதுமின்றி நிமிர்ந்து நிற்கும் ஏழை இளைஞன் இயேசுவா? யார் பெரியவர்? யார் உண்மையில் அரசர்?

கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, ஒரு சில எண்ணங்கள் மனதில் எழுகின்றன. முதலாம் உலகப்போர் முடிந்தாலும், உலகத்தில் இன்னும் பகைமை, பழிவாங்கும் வெறி இவை அடங்கவில்லை. இந்த உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது அரசர்களின், தலைவர்களின் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், தங்கள் அதிகாரம் இன்னும் பல மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென இவர்கள் நாடுகளிடையே வளர்த்த பகைமையைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் திருஅவைத் தலைவர்களும், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு கிறிஸ்துவை அரசராக அறிவித்தனர். கிறிஸ்துவும் ஓர் அரசர்தான், அவரது அரசத்தன்மையையும், அவர் நிறுவ வந்த அரசையும் மக்கள் கண்டு பாடங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது.

பதவி, அதிகாரம் என்ற பாரங்களால் உண்மை இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் நசுக்கப்பட்டு கொலையாகிறது. பொய்மைதான் வாழ்வதற்கு ஒரே வழி என்று சொல்லுமளவுக்கு உண்மைகள் ஒவ்வொரு நாளும் புதைக்கப்படுகின்றன. இந்நிலையில் நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் ஓர் உயர்ந்த பாடம் என்ன? உண்மைக்காக வாழ்ந்தவர்கள், இன்றும் வாழ்பவர்கள் மனிதர்களால் செய்யப்படும் அரியணைகளில் ஏற முடியாது. அவர்களில் பலர், மனிதர்கள் உருவாக்கும் சிலுவைகளில் மட்டுமே ஏற்றப்படுவார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே இறைவனின் அரசில் என்றென்றும் அரியணையில் அமர்வர் என்ற உண்மையே, இந்தத் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம். இப்பாடத்தைப் பயில, கிறிஸ்து அரசருக்கு இவ்வுலகம் தந்த சிலுவை என்ற அரியணையை நாம் நம்பிக்கையுடன் அணுகி வருவோம்.








All the contents on this site are copyrighted ©.