2012-11-23 15:22:22

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சக்தி பெறும் இரயில் நிலையங்கள்


நவ.23,2012. மத்தியப்பிரதேச மாநில அரசு, போபால் இரயில்வே பகுதிக்கு உட்பட்ட 5 இரயில்வே நிலையங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சக்தி வழங்க தீர்மானித்துள்ளது. இதன்மூலம், மின்வாரியத்திற்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் மின்கட்டணம் பெருமளவு குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய ஒளியை பயன்படுத்தி, இரயில்வே நிலையங்களைப் பசுமை நிலையங்களாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்தியப்பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது என்று, போபால் பகுதி இரயில்வே மேலாளராகப் பொறுப்பேற்றுள்ள ராஜிவ் சவுத்ரி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
இப்புதிய திட்டத்தின் மூலம், மாதம் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் என்ற அளவிற்கு மின் வாரியத்திற்கு கட்டப்பட்டு வரும் பணம் மிச்சமாகும் என்றும் ராஜிவ் சவுத்ரி கூறினார்.
மின்சக்தியை மேலும் சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட மின் இணைப்புக்கள் இந்நிலையங்களில் பெருமளவு பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.