2012-11-23 15:18:53

திருத்தந்தை : துன்பங்களை எதிர்கொள்ளும் கடல்தொழில் செய்வோருடன் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது


நவ.23,2012. "அநீதியான சூழல்களை" அடிக்கடி எதிர்நோக்கும் கடல்தொழில் செய்வோருக்கும் புதுப்பிக்கப்பட்ட புதிய நற்செய்திப்பணி தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
தாங்கள் வேலை செய்யும் கப்பல்களையும் படகுகளையும் விட்டுவிட்டு தரைக்கு வருமாறு வலியுறுத்தப்படல், கடல் கொள்ளையர்களால் அச்சுறுத்தப்படல், சட்டத்துக்குப் புறம்பே மீன்பிடிக்கும்போது துன்புறுதல் போன்ற சூழல்களை இத்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த, கடல்தொழில் செய்வோருக்குத் திருஅவையின் மேய்ப்புப்பணி குறித்த 5 நாள் 23வது அனைத்துலக கருத்தரங்கில் கலந்து கொண்ட ஏறக்குறைய 400 பேரைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
கப்பலில் வேலை செய்வோர், மீனவர்கள், இன்னும் கடலில் பயணம் செய்வோர் எதிர்நோக்கும் துன்பங்களை மனதில்கொண்டு திருஅவை அவர்களுக்கான மேய்ப்புப்பணிகளில் அதிகக் கவனம் செலுத்துமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப மதிப்பீடு பாதுகாக்கப்படல், பணிசெய்யுமிடத்தில் தரமான மற்றும் பாதுகாப்பான நிலை போன்றவற்றை மீனவர்கள் எதிர்நோக்குகிறார்கள், இவர்களோடு திருஅவை உடனிருக்கின்றது என்றும் உறுதியளித்தார்.
இத்தகைய அனைத்துலக கருத்தரங்கு, 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது, 1982ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் உரோமையில் நடைபெற்றது. கடல்தொழில் செய்வோருக்குத் திருஅவையின் மேய்ப்புப்பணி குறித்த விதிமுறைகள் முதல்முறையாக 1922ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி திருத்தந்தை 11ம் பத்திநாதரால் வெளியிடப்பட்டது. அதன் 90ம் ஆண்டின் நிறைவாக இப்போதைய கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் 70 நாடுகளின் ஏறக்குறைய 400 பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.