கூடங்குளம் அணுக்கழிவுகளை புதைக்க கோலாரில் எதிர்ப்பு
நவ.23,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து
வெளியாகும் அணுக்கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், மூடப்பட்ட தங்கச் சுரங்கங்களில்
சேமித்து வைக்கப் போவதாக இந்திய அரசு இப்புதனன்று தெரிவித்திருப்பதற்கு, கோலாரில் கடும்
எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து, இவ்வெள்ளிக்கிழமை
(நவம்பர்23) கோலார் தங்கவயல் மக்கள் உரிமை பாதுகாப்பு என்ற அமைப்பினரின் தலைமையில் கோலார்
பகுதியில் ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அணுக்கழிவுகளை கோலார்
சுரங்கங்களில் சேமித்து வைப்பதாகக் கூறும் மத்திய அரசின் முடிவு, கோலார் பகுதிவாழ் மக்களை
பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருப்பதாக இவ்வமைப்பின் தலைவர் இராஜேந்திரன் கூறினார். இந்தக்
கழிவுகள் கோலாரில் கொண்டுவந்து சேமித்து வைக்கப்படுவதன் மூலம் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு
மட்டுமல்ல, அங்குள்ள தாவரங்களுக்குக் கூட கடும் பாதிப்புக்கள் ஏற்படுத்தும் என்று தம்மிடம்
அறிவியலாளர்கள் தெரிவித்திருப்பதாகவும் இராஜேந்திரன் கூறினார். இந்திய அரசின் இந்த
முடிவை எதிர்த்து, தாங்கள் நீதிமன்றங்களை அணுகப்போவதாகவும் அவர் கூறினார்.