திருத்தந்தை - நம்பிக்கையின் அழகையும் வலிமையையும் உணர்வதற்காக இரண்டாம் வத்திக்கான்
சங்கம் கூட்டப்பட்டது
நவ.22,2012. நம்பிக்கையின் அழகையும் வலிமையையும் உணர்வதற்காக இரண்டாம் வத்திக்கான் சங்கம்
கூட்டப்பட்டது, அதன் 50ம் ஆண்டு நிறைவில் மீண்டும் அந்த நம்பிக்கையை நாம் கொண்டாட நடைபெறும்
நம்பிக்கை ஆண்டில் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இப்புதன்
மாலை, திருப்பீடத்தின் அனைத்து கல்வி அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டத்தில் திருத்தந்தை
வழங்கியச் செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே வாசித்தார். அண்மையில்
திருத்தந்தையால் நிறுவப்பட்ட லத்தீன் மொழி பயிற்சிக்கான அறக்கட்டளையைக் குறித்து திருத்தந்தை
தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார். “நம்பிக்கை வெளிப்பாட்டின் பல
வடிவங்கள்: நம்பிக்கையின் அழகிற்குச் சாட்சியம் பகரும் கலைஞர்கள்” என்ற மையக் கருத்துடன்
கூடிவந்த இந்த 17வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் திருத்தந்தை வாழ்த்தினார். இக்கூட்டத்தின்
நடைமுறைச் செயல்பாடுகளை, கலாச்சாரத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi
விளக்கினார். திருப்பீட அறக்கட்டளைகள் நடத்தும் நிறுவனங்களில் கடந்த ஆண்டு வெற்றிபெற்றோருக்கு
கர்தினால் பெர்தோனே பரிசுகள் வழங்கினார்.