2012-11-22 15:42:34

தவறு செய்வோர் மீண்டும் நன்னெறியுடன் வாழ வழிவகைகள் செய்வதும் நீதியின் ஒரு முக்கிய அங்கம் - திருத்தந்தை


நவ.22,2012. தவறு செய்வோரைத் தண்டிப்பது மட்டும் நீதி ஆகாது, மாறாக, அவர்கள் மீண்டும் நன்னெறியுடன் வாழ வழிவகைகள் செய்வதும் நீதியின் ஒரு முக்கிய அங்கம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நவம்பர் 22, இவ்வியாழன் முதல் இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் சிறை அதிகாரிகளின் 17வது உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் 200க்கும் அதிகமான உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, மனித நீதி, இறை நீதியின் அடிப்படையில் உருவாகவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
தாள்களில் பதிந்துவிடும் நீதி மன்றத்தீர்ப்புகளை மனதில் எழுதி, அவற்றைத் தகுந்த வகையில் அர்த்தம் கண்டு, தீர்ப்புக்குள்ளானவர்களை வழிநடத்தும் கடினமான பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை சிறை அதிகாரிகளிடம் கூறினார்.
"சிறைகளிலும் ஜுபிலி" என்ற கருத்துடன் ஜுபிலி ஆண்டான 2000மாம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் வழங்கியக் கருத்துக்களைச் சுட்டிக் காட்டிப் பேசியத் திருத்தந்தை, விடுவிக்கும் அன்பை நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளும் நீதியே உண்மையான நீதி என்று மறைந்த திருத்தந்தை கூறியதையே தானும் வலியுறுத்துவதாகக் கூறினார்.
மனித மாண்பை இழந்து சிறையில் வாடும் மனிதர்களுக்கு மீண்டும் அந்த மாண்பை அளிக்கும் வகையில் உழைக்கும் அனைத்து அதிகாரிகளையும், அவர்களது பணிகளையும் இறைவன் ஆசீர்வதிக்கவேண்டும் என்ற வாழ்த்துடன் திருத்தந்தை இச்சந்திப்பை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.