2012-11-22 15:45:34

காசாப் பகுதி ஒரு பெரிய திறந்தவெளி சிறை - இலத்தீன் ரீதி பேராயர் Fouad Twal


நவ.22,2012. காசாப் பகுதி ஒரு பெரிய திறந்தவெளி சிறை என்றும், அங்கு வாழும் மக்கள் சிறைகளில் வாழ்வோரைக் காட்டிலும் மிக அவலமான நிலையில் உள்ளனர் என்றும் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal கூறினார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தலைவர்கள் மோதல்களைக் கைவிடுமாறு தன் மறைப்போதகத்தின் இறுதியில் திருத்தந்தை குறிப்பிட்ட இப்புதனன்று, இலத்தீன் ரீதி பேராயர் Fouad Twal, காசாப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துப் பேசினார்.
போரைப் புனிதம் என்று அழைப்பது எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமுடியாது என்றும், வன்முறைகளையும், அழிவையும் உருவாக்கும் எந்த முயற்சியும் புனிதமாகாது என்றும் வலியுறுத்தினார் பேராயர் Twal.
இதற்கிடையே, இப்புதன் மாலை ஏழு மணியளவில் இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பினரும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஒரு வாரத்திற்கும் மேலாக நிகழ்ந்த இத்தாக்குதல்களில் இதுவரை பாலஸ்தீனப் பகுதியில் 158 பேரும், இஸ்ரேல் பகுதியில் 5 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.