நவ.21,2012. காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஹமாஸ் புரட்சியாளருக்கும் இடையே
இடம்பெற்றுவரும் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு இப்புதன் மறைபோதகத்தின் இறுதியில்
கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இஸ்ரேலுக்கும் காசா பகுதியிலுள்ள
பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அதிகரித்துவரும் வன்முறை குறித்துத் தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகக்
கூறிய திருத்தந்தை, இந்த வன்முறையில் பலியானவர்கள் மற்றும் துன்புறுவோருக்காகத் தான்
செபிப்பதாகவும் தெரிவித்தார். போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு
எடுக்கப்படும் முயற்சிகளைத் தான் ஊக்குவிப்பதாகவும், இருதரப்பு அதிகாரிகளும் அமைதிக்கு
ஆதரவாகத் துணிச்சலான தீர்மானங்களை எடுக்குமாறும், இதன்மூலம் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும்
இடம்பெறும் மோதல்கள் முடிவுக்கு வரும் எனவும், அதிகமான சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள
மத்திய கிழக்குப் பகுதிக்கு அமைதியும் ஒப்புரவும் தேவை எனவும் கூறினார் திருத்தந்தை.