கம்போடியா நாட்டில் Manos Unidasஆரம்பித்துள்ள குழந்தைகள்நலத்
திட்டம்
நவ.21,2012 நவம்பர் 20, இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்ட அகில உலகக் குழந்தைகள் நாளையொட்டி,
கம்போடியா நாட்டின் Russey Keo எனும் கிராமத்தில் Manos Unidas என்ற ஒரு கத்தோலிக்கப்
பிறரன்பு நிறுவனம் குழந்தைகள் நலனை மையப்படுத்திய திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது. கம்போடியாவின்
தலைநகரான Phnom Penhக்கு அருகே அமைந்துள்ள இக்கிராமத்தில் வாழ்பவர்கள் அருகில் உள்ள தலைநகருக்குச்
சென்று குப்பைப் பொறுக்குதல், தெருக்களைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு,
மிகக் குறைவான ஊதியம் பெறுபவர்கள் என்பதால், அவர்களின் குழந்தைகளும் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு
உட்படுத்தப்படுகின்றனர் என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. கல்வியறிவும்,
நலவாழ்வுமின்றி வாழும் இக்குழந்தைகளுக்கு பல அடிப்படைக் கல்வி மையங்களை அமைப்பதற்கு Manos
Unidas அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இச்செவ்வாயன்று துவக்கப்பட்ட புதிய திட்டத்தின்
வழியாக Russey Keo கிராமத்தைச் சேர்ந்த 500 குழந்தைகள் பயன்பெறுவர் என்று Fides செய்திக்
குறிப்பு மேலும் கூறுகிறது.